புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்தது வெளிச்சம் பார்த்துள்ளது.
தேர்தலில், ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு எதிராக போட்டியிட்ட இண்டி கூட்டணியின் சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 15 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மொத்தம் 781 வாக்காளர்களில், 14 பேர் வாக்களிக்கவில்லை. இதில் 7 பேர் பிஜூ ஜனதாதளம், 4 பேர் பி.ஆர்.எஸ்., ஒருவர் அகாலி தளம், 2 பேர் பஞ்சாப் மாநில சுயேச்சை எம்.பிக்கள் ஆவர்.

என்டிஏவின் அதிகாரபூர்வ பலம் 427 ஆக இருந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 11 பேரையும் சேர்த்தாலும் 438 ஓட்டுகள் மட்டுமே கிடைக்க வேண்டும். ஆனால் ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகளைப் பெற்றதால், கூடுதல் 14 வாக்குகள் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிலர், ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் கவர்னராக இருந்ததால் அங்குள்ள எம்.பிக்களுடன் அவருக்கு நல்ல தொடர்பு இருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால், சிவசேனா, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தங்கள் எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என மறுத்துள்ளன. இதனால், மாற்றி வாக்களித்த எம்.பிக்கள் யார் என்ற விவாதம் டெல்லி அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது.