மசாலா பொருட்கள் என்றாலே இந்தியா முன்னணியில் இருக்கும் நாடாகும். உலக அளவில் மசாலா சந்தையில் இந்தியா முக்கிய இடம் பிடித்து வருகிறது. இந்த மசாலா உலகில் மிகவும் மதிப்புமிக்க ஒன்று ஏலக்காய். ‘மசாலா பொருட்களின் ராணி’ என அழைக்கப்படும் ஏலக்காயை நம் வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடியும் என்றால், அது பெரும் மகிழ்ச்சி தரும் விஷயம்.

ஏலக்காய் செடியை வளர்க்க அதிக இடம் தேவையில்லை. சரியான பராமரிப்பு இருந்தால், உங்கள் வீட்டின் பால்கனி அல்லது மொட்டை மாடியிலேயே அதை வளர்க்கலாம். முதலில் ஒரு சிறிய தொட்டி அல்லது உதிரி வசதி உள்ள கொள்கலனில் வளமான மண்ணும் மாட்டு சாணமும் கலந்து நிரப்ப வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் 4 அல்லது 5 உலர்ந்த ஏலக்காய்களின் விதைகளை எடுத்து, தோலிலிருந்து பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஏழு மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த விதைகளை வடிகட்டி மண்ணில் லேசாக அழுத்தி போட வேண்டும். மேலே மிருதுவான மண் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.
சுமார் இரண்டு வாரங்களில் இவை முளைத்து சிறிய செடியாக மாறும். இரு மாதங்களில் நன்கு வளரத் தொடங்கும். வளர்ச்சியை வேகமாக்க, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரிம உரங்களை பயன்படுத்தலாம். காய்கறி மற்றும் பழ தோல்களை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை செடியில் ஊற்றலாம்.
ஏலக்காய் செடி நிழல் இடத்தையே விரும்பும். அதனால் நேரடி வெயிலில் வைக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால் அதிக நீர் ஊற்றுவதும் கூடாது. தவறாமல் மாதம் ஒரு முறை உரம் இட வேண்டும்.
இவ்வாறு சரியான முறையில் பராமரித்தால், உங்கள் வீட்டிலேயே தூய்மையான ஏலக்காயைப் பெற்றுவிடலாம்.