தஞ்சாவூர்: தன்மானமிக்க தமிழ்நாடு தலை வணங்காது, ஒருபோதும் அடிபணியாது என்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: வழிபாட்டுத் தலங்கள் என்பவை தொழுகைக்கான இடங்களாக மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமை, சமூக வளர்ச்சி, கல்வி ஆகியவற்றோடு தொடர்புடையது என்று மெய்ப்பித்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில முன்மாதிரி மஹல்லா ஜமாத் விருதுகளைப் பெற்றுள்ள 30 பள்ளிவாசல் பொறுப்பாளர்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்க எப்பவும் உங்களோட உள்ளவர்கள்தான். உள்ளத்தால், உணர்வால் உடன்பிறப்புகள் நாம்.
இது இன்று நேற்று ஏற்பட்ட உணர்வல்ல, காலங்காலமாக தொடரக்கூடிய நட்பு. பேரறிஞர் அண்ணாவையும், தலைவர் கருணாநிதியையும் இணைக்கும் பாலமாக இருந்ததே திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழா தான். தமிழ்நாட்டு வரலாற்றைப் புரட்டிப் போட்ட 1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணாவுக்குத் தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். இஸ்லாமிய மக்களுக்காக தலைவர் கருணாநிதி செய்திருக்கக்கூடிய நன்மைகளை, சாதனைகளை, அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்கிறேன். முதல் முறை ஆட்சிக்கு வந்த உடனேயே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை என்று அறிவித்தார். அ.தி.மு.க. அரசு அதை ரத்து செஞ்சாலும், மீண்டும் ஆட்சிக்கு வந்து அரசாணை வெளியிட்டு விடுமுறை வழங்கினார். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி, இடம் ஒதுக்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கினார். காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் என கருணாநிதி செஞ்சதை எல்லாம் பட்டியலிட்டா இன்னைக்கு முழுக்க நான் சொல்லிக்கிட்டே இருக்கணும். கலைஞர், இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று ஒருபோதும் நினைத்ததே கிடையாது. அதனாலதான் இஸ்லாமிய சமூகத்தினர் நன்றி தெரிவிக்கும் விழா நடத்துனப்போ, ‘எனக்கு நன்றி சொல்லி உங்ககிட்ட இருந்து என்னைப் பிரிச்சிடாதீங்க’ன்னு சொன்னார்.
கருணாநிதி சொன்ன அதே உணர்வோடு தான், அதே வழிதடத்தலில் தான் இந்த ஸ்டாலினும், திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்களை சில முத்தாய்ப்பான திட்டங்களை சொல்ல விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய இஸ்லாமியர்களுக்காக தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறோம். 2024-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.24 கோடியே 56 லட்சம் மானியமாக வழங்கி தமிழ்நாட்டில் இருந்து 11,364 ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக 31,625 பயனாளிகளுக்கு ரூ.207 கோடியில் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மத்தியஅரசு சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. அதனால் இந்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் படிக்கிற 1,01,159 முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகையை தமிழ்நாடு அரசே வழங்கியிருக்கிறது. தொன்மையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களைப் புனரமைக்கக்கூடிய பணிகளுக்காக இதுவரைக்கும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 தர்காக்கள் இன்றைக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்க்கைச் சூழலை, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக நம்ம திராவிட மாடல் அரசு நாள்தோறும் சிந்தித்துச் செயல்பட்டு வருகிறது.
இன்றைக்கு நாடு எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறது என:று நான் அதிகம் உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அதுலயும் இஸ்லாமிய மக்களான நீங்க… எந்த சூழல்ல எதிர்கொள்கிறீங்கன்னு உலகத்துக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில உறுதியோடு சொல்றேன், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கு காரணம் தி.மு.க. தான் சிறுபான்மையின மக்களை காக்கக்கூடிய காவல்அரண். அதனால்தான் உங்க உணவு, அரசியல், கும்பல் வன்முறை போன்றவை இன்றைக்கு தலைதூக்காமல் இருக்கு.
இந்த அமைதிச் சூழல் சிலரோட கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தலாமான்னு அவங்க போடுற ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாகிட்டு இருக்கு. அதனால தங்களுக்கு ஏத்த அடிமைகளாக இருக்கிறார்களே ஈ.டி., சி.பி.ஐ., ஐ.டி. இது போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி தங்களுக்கான கூட்டணியா உருவாக்கி மேடையேறி இருக்காங்க இன்னைக்கு. பழனிசாமி, முஸ்லிம்களுக்கு எதிரான தன்னுடைய பயணத்தை தொடர்ந்துட்டு இருக்காரு. பழனிசாமியோட துரோகங்களை நாம் எண்ணிப் பார்த்தால் சீனப் பெருஞ்சுவரைப் போல நீளமானது.
அவருக்கு தெரிஞ்சதெல்லாம் ரெண்டு தான். ரெண்டே ரெண்டுதான். ஒன்று காலில் விழுவது, இன்னொன்னு கால்களை வாரி விடுறது. அப்படிப்பட்டவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செஞ்ச துரோகங்கள் எல்லாம் சொல்லணும்னா அந்தப் பட்டியலும் ரொம்ப பெருசு.
சி.ஏ.ஏ. சட்டம் மட்டுமல்ல… முத்தலாக் தடைச் சட்டத்தையும் ஆதரித்து இரட்டை வேடம் போட்டது அ.தி.மு.க. அடுத்து வக்பு சட்டத் திருத்தம். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும். நீதிமன்றத்திலும் கடுமையாகப் போராடினோம். பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் அ.தி.மு.க.வின் லட்சணம் என்ன தெரியுமா? எங்கே மக்கள் முன்னால் அம்பலப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த தீர்மானத்தை ஆதரித்தாலும், தன்னுடைய டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொள்வார்களோ என்று நாம் கொடுத்த கருப்பு பேட்ஜ் கூட போட்டுக் கொள்ளாமல் ஓடி ஒளிந்தார்கள்.
சட்டமன்றத்தில் இந்த நாடகம் என்றால், நாடாளுமன்றத்தில் அன்றைக்கு அ.தி.மு.க.வின் எம்.பி. தம்பிதுரை 11 வினாடி தான் பேசினார். அதிலேயேயும் வக்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்று முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தாமல், பா.ஜனதா அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இப்படியெல்லாம் துரோகம் செய்துவிட்டு ஒரு கூட்டத்தில் பேசும்போது, கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு தங்களுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத சட்டங்களுக்கு ஆதரவளித்தோம்’ என்று பச்சைப் பொய் பேசுகிறார்கள்.
இப்போது ஒரே மேடையில் நிற்கும் இந்த மக்கள் விரோத கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டக்கூடிய கடமை நம்ம எல்லோருக்கும் இருக்கிறது, மறந்துவிடாதீர்கள். அதற்கான வலிமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குத்தான் இருக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மை மக்களுக்கு எதிரான அ.தி.மு.க.வின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும். 2026 தேர்தல் களம் தமிழ்நாட்டின் நலனைக் காக்கக்கூடிய கூட்டணிக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மறந்துவிட வேண்டாம்.
பா.ஜனதாவின் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் அது வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை நாசப்படுத்திவிடும். ஆனால் அதைத் தடுக்கிற துணிச்சலும் தைரியமும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் இருக்கிறது. எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள் வீதி வீதியாக, வீடு வீடாகப் பரப்புரையைத் தொடங்கிவிட்டது மாதிரி, நான் உரிமையோடு உங்களிடத்திலே கேட்க வந்திருக்கிறேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களும் உடனடியாகத் தன்னுடைய பரப்புரையைத் தொடங்குங்கள், தயாராகுங்கள்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியைச் சீர்குலைக்க முடியாது. சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைத்திருக்கும் அடிமைகளுக்கும், அவர்களுக்குக் கட்டளையிடுகிற டெல்லி எஜமானர்களுக்கும் புரிகிற மாதிரி உரக்கச் சொல்வோம், உறுதியோடு சொல்வோம். ‘தன்மானமிக்க தமிழ்நாடு தலை வணங்காது, ஒருபோதும் அடிபணியாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.