சென்னை: தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் தாக்கல் பொதுக்கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:- ஏழை, எளியோருக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட். 2047-ல் வல்லரசாக மாற இந்த பட்ஜெட் அடித்தளம் அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாடு அனைத்து துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாள் முதல், மக்கள் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம், சொத்துவரி உயர்வு என அனைத்து சுமைகளையும் மக்கள் தலையில் சுமத்துகிறார்கள். ஆனால், பொய்யான சாக்குப்போக்குகளை போட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதைப் பற்றியெல்லாம் திமுக கவலைப்படவில்லை.
வேங்கைவயல் பிரச்னையில் புகார் கொடுத்தவர்களையும் குற்றவாளிகளாக மாற்றி திமுக அரசு பெரும் அநீதி இழைத்துள்ளது. இது திமுக அரசின் போலித்தனத்தை காட்டுகிறது. மக்களை ஏமாற்றும் மாயாஜால காரியங்களை திமுக செய்கிறது. திமுக என்றால் ஏமாற்றுவது, ஊழல் செய்வது என்று பொருள். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 2026-ல் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.