சென்னை: திமுக சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் வந்துள்ளது. வரும் 10 முதல் 14-ந்தேதி வரை நேர்காணல் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் 20.02.2026 முதல் 06.03.2026 வரை பெறப்படும் என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது நிறைவடைந்துள்ளது.
கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விருப்ப மனு மீதான நேர்க்காணல் மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.