விருதுநகர்: விசுவாசத்தின் உருவம் கட்டப்பா.. துரோகத்தின் உருவம் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சாத்தூர் வேட்பாளர் கடற்கரை ராஜ், ராஜபாளையம் வேட்பாளர் செள.தங்கபாண்டியன், சிவகாசி வேட்பாளர் கணேசன் அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மகாலிங்கம், திருச்சுழி வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பதைப்போல், விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர், அவருடைய மண் இது. சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான், சாத்தூர் என்றாலும் விருதுநகர்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர் தீப்பெட்டியாக இருந்தாலும் விருதுநகர்தான், பரோட்டாவாக இருந்தாலும் விருதுநகர்தான், காலண்டராக இருந்தாலும் விருதுநகர்தான்.
அருப்புக்கோட்டை தொகுதியின் வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர். அன்று முதல் இன்று வரை சுறுசுறுப்பாக மக்கள் பணியாற்றுகிறவர். திராவிட மாடலில் 21 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருப்பதில் பெரும் பங்கு வகித்த அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பியூஸ்போன சாமியாகி விட்டார். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். பாகுபலி படத்தில் சத்யராஜை பார்த்து, விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா என்று சொல்கிற மாதிரி ஒரு டயலாக் வரும்; அதைபோல துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு அவர் பேசினார்.