சென்னை: மின்சார வாகனங்களாக மாற்றம்… பிரதமரின் அறிவுறுத்தலின்படி மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் கான்வாய் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கான்வாய் வாகனங்கள் மின்சார வாகனங்களாகவும் மாற்றப்பட்டன.
போர்ச்சூழல் காரணமாக சர்வதேச அளவில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு சமீபத்தில் பிரதமர் நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் வீட்டில் இருந்து பணிபுரியுமாறும் அறிவுறுத்தி இருந்தார். இதனை அடுத்து பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் திருப்பூர் புறப்பட்டார்.
அப்போது, பிரதமரின் அறிவுறுத்தலின்படி, மத்திய இணை அமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பயணம் செய்யும் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.