சென்னை: சட்டசபையில் ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.
சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறி உள்ளார்.சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி உள்ள ஆளுநர், தமிழக அரசின் மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டசபையில் நடந்தது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவயது:* மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார்.* முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு.* ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு.
ஆளுநர் உரையை படியுங்கள் என்று தான் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். எவ்வளவு தாழ்மையுடன் கேட்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையுடன் கேட்டார் சபாநாயகர். ஆளுநரின் மைக் அணைக்கப்படவில்லை. ஆளுநரின் மைக் அணைக்கப்பட்டதாக கூறியது பச்சை பொய். எதிர்க்கட்சிகளே சொல்லாத பொய்யை ஆளுநர் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.
தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை மத்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே சாட்சி. ஆளுநருக்கு தமிழகத்தின் மீது என்ன வெறுப்பு என்பதை அவர்தான் கூற வேண்டும். ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வருகிறது.* முன்னரே இப்படி ஒரு அறிக்கையை தயாரித்து விட்டு திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.