
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- புயல், வெள்ள நிவாரணம், பயிர் சேதங்களுக்கு குறைந்த அளவிலான நிவாரணத்தை மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போதுதான் தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொண்டுள்ளனர். இரு இலைகள் நம்மிடம், அதிகாரம் நம்மிடம் என்று இன்னும் தூங்கிக் கொண்டும், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டும் இருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி மூடு விழா நடத்துவார்.

அதானி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. விஜய் குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இவ்வாறு அவர் கூறினார். டிடிவி.தினகரன் எங்கு சென்றாலும் 2026 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி அதிமுகவுக்கு மூடுவிழா நடத்துவேன் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.