புதுடில்லி: யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மேற்காசிய நிலவரம், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை இயல்புக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருதலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.
இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு முன்கூட்டியே ஈத் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். அப்பாவி உயிர்களை பறித்து, பொது மக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்த ஐக்கிய அரபு அமீரகம் மீதான அனைத்துத் தாக்கு தல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதை மீண்டும் வலியுறுத்தினேன். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
இந்த பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்காக நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.