சென்னை: இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
எல்லோரும் நல்லா இருக்கீங்களா என பொதுமக்களிடம் கேட்டு தனது உரையை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என கூறினார். காந்தியடிகள்.மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா.
அண்ணா காட்டிய பாதையில் கலைஞர் கருணாநிதி உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்தினார். தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து கிராம சபை கூட்டங்களை நடத்துவது இதுவே முதல்முறை. மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தி உள்ளோம். கிராமங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
கிராமங்களை சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம். இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.