திண்டிவனம்: ராமதாசும் அன்புமணியும் இணைய வேண்டும் என்பது தான் பா.ம.க.வினரின் ஆசை என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிரச்சனை. இது குறித்து கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. நான் கட்சிக்கும் ராமதாஸ்-அன்புமணிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கட்சிக்காகவும் மக்கள் பிரச்சனைக்காகவும் உழைத்தவன் நான். ஆனால் என்னை பற்றி அவதூறு கருத்துகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
ராமதாசும் அன்புமணியும் விரைவில் இணைய வேண்டும் என்பது தான் பா.ம.க.வினரின் ஆசை. கால சூழ்நிலையில் பா.ம.க.வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலம். என்ன காரணமோ தெரியவில்லை. பா.ம.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. விரிசலுக்கு நான் எந்த விதத்திலும் காரணமில்லை. இந்த தகவலை கேட்ட நான் கண்ணீர் விட்டு கதறினேன். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் பா.ம.க. சிதற வேண்டும் என நினைப்பேனா.
நான் 2 முடிவுகள் எடுத்துள்ளேன். ஒன்று குடும்பத்தோடு தலைமறைவு ஆவது. மற்றொன்று உயிரை துறப்பது. இது தான் வழி என நினைக்கிறேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். ராமதாஸ், அன்புமணியை சந்தித்து சமாதானம் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.