சென்னை: கொள்கை கூட்டணி என்றால் புதுச்சேரியில் ஏன் எதிரெதிரே போட்டி என்று திமுகவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி என்றால் புதுச்சேரியில் ஏன் திமுக கூட்டணி கட்சிகள் எதிரெதிரே போட்டியிடுகின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அபோது பேசிய அவர், “திமுக தமிழகத்தில் கொள்கை கூட்டணி என்று சொல்கின்றனர். அப்படி என்றால் பாண்டிசேரியில் ஏன் கொள்கை கூட்டணி இல்லை.
அங்கு ஏன் திமுக கூட்டணி கட்சிகள் எதிர் எதிரே போட்டியிடுகின்றனர். அப்போது மாநிலத்திற்கு மாநிலம் வேறு கொள்கையா?. திமுகவின் ஒரே கொள்கை கொள்ளை அடிப்பது தான். நிஜ வாழ்க்கை வேறு, சினிம வாழ்க்கை வேறு. இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உள்ளத்தை புரிந்து செயல்படுவது அதிமுக. இந்தியாவிலேயே கொரோனா கட்டுபடுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களில் ஆய்வு செய்து சிறப்பாக அதிமுக ஆட்சியாக செயல்பட்டோம்.
அதிமுகவை, பாஜகவின் அடிமை என்று திமுகவினர் சொல்லுகின்றனர். ஏன் நாங்கள் மட்டும் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோமா? பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவினர் மத்திய மந்திரி ஆகவில்லையா…?அப்போது எல்லாம் பாஜகவின் அடிமையாக திமுக செயல்படவில்லையா?
திமுக 15 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தனர். அப்போது தமிழகத்திற்கு எந்த நிதி கொண்டு வந்தனர். காங்கிரஸில் தமிழகத்தை சேர்ந்த சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல்… யார் அந்த சார் என்று பலரும் கேட்டனர். ஆனால் பதில் இல்லை.. அதிமுக ஆட்சிக்கு வந்தது யார் அந்த சார் என்று கண்டுபிடிக்கப்படும். இன்று கூட அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
தாம்பரம் வேளச்சேரி இடையே மெட்ரோ ரெயில் அமைக்கப்படும். தாம்பரம் மாநகராட்சி பகுதியில் விடுவிக்கப்பட்ட பாதாள சாக்கடை முழுமையாக அமைக்கப்படும்” என்றார்.