
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும், முதல்வர் யார் என்பது தெரியவில்லை. முதல்வர் போட்டியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே விலகியதால், பா.ஜ.,வில் இருந்து, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.
ஆனால் அதை பகிரங்கமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இடைக்கால முதல்வராக ஷிண்டேவையே தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டணியை சரியாக நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதால் தாமதம் ஏற்படுவதாகவும், முதல்வர் யார் என்ற குழப்பம் முக்கிய காரணமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் இலாகாப் பங்கீட்டில் எந்தவித கசப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அஜித் பவார், ஷிண்டே ஆகிய இருவருடனான சமன்பாடுகள் மாறிவிட்டதாகவும், அதற்கேற்ப அமைச்சர்கள் இலாகாக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. அமித்ஷா தலைமையில் நேற்று நடந்த ஒரு மணி நேர ஆலோசனையில் கூட அமைச்சர்கள் இலாகாக்கள் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.