சென்னை: ஜிபே (GPay) மூலம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் திட்டக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீது விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடலூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் வசந்தா, இளவரசன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்கவில்லை. விசாரிக்க வேண்டுமானால் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியதாக விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார். இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டபடி 1,500 ரூபாயை ஜிபே மூலம் அனுப்பியதையும், ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையில் விஜயலட்சுமி புகார் கொடுத்தார். அந்த புகாரும் ஏதும் செய்யாமல் முடிக்கப்பட்டதாகவும், அதற்கும் லஞ்சம் பேரம் பேசி முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் புகார் எழுந்தது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ஜிபே வழியாக பணம் பரிமாறப்பட்டதற்கான ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும், குறித்த காவலர் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவுசெய்த நீதிபதி வழக்கை முடித்து உத்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.