காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தில் பேச வந்தார். இரவு 9 மணியளவில், பிரதான கடைத்தெரு வழியாக தனது பிரச்சார வாகனத்தை ஓட்டிச் சென்று பேருந்து நிலையம் முன்பு பேசினார்.
அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் அதிமுக உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். மேலும், பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் நடைபெற்றதால், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தொடர்ந்து பேசியதால், பேருந்துகள் வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதை அறிந்த ஓட்டுநர்கள், பேருந்துகளை மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு கூடியிருந்த அதிமுகவினர், ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அதிமுகவினர் அதை ஏற்க மறுத்ததால், பொதுமக்கள் அங்கு திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி பிரச்சாரம் முடிந்ததும் இயல்பு நிலை திரும்பியது.
பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் நடைபெற்றதால், இரவு நேர தாமதம் காரணமாக சென்னை மற்றும் பல ஊர்களுக்குச் செல்லும் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக பேருந்தில் காத்திருந்த பயணிகள் தெரிவித்தனர்.