பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டித்தன்மையுடன் விண்ணப்பிக்கின்றனர். இதுவரை, பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர மே 7 முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. நேற்று, 18-ம் தேதி மாலை 6.60 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 40,754 பேர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இதில், 1 லட்சத்து 73,005 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து 1 லட்சத்து 30,262 பேர் விண்ணப்பப் பதிவை முடித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6-ம் தேதி கடைசி நாளாகும். பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.
அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 27-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.