சென்னை: கொகைன் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜூன் 24 அன்று நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் கெவின் ஆகியோர் 26-ம் தேதி அதே வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை சிறப்பு போதைப்பொருள் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

‘இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும் அவற்றை பதுக்கி வைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. எங்களிடமிருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஹெர்ம்ஸ் முன்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.