பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் ஏந்திய காவலர்களை நியமிக்க வேண்டும்.

தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்தில் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வெளி பணி மூலம் வெளியாட்களை நியமிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்திய வங்கிகள் சங்க அதிகாரிகள், மத்திய நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவற்றை நேரடியாக கண்காணிப்பதாக தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 3-வது வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், 24 மற்றும் 25-ம் தேதிகளில் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.