சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தக கண்காட்சி டிச., 27 முதல் ஜன., 12 வரை நடக்கிறது. இதுகுறித்து, சென்னை நந்தனத்தில் தலைவர் எஸ்.சொக்கலிங்கம், செயலர் எஸ். கே. முருகன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
48-வது சென்னை புத்தக கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் டிச., 27 முதல் ஜன., 12 வரை நடக்கிறது. டிசம்பர் 27-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். பொன் கலைஞர் விருதுகள் மற்றும் பாபாசி வழங்கும் விருதுகளை துணை முதல்வர் வழங்குகிறார். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

மொத்தம் 17 நாட்கள் நடைபெறும். 900 ஸ்டால்கள் அமைக்கப்படும். அனைத்து ஸ்டால்களிலும் அனைத்து புத்தகங்களும் 10 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும். பபாசி இல் உறுப்பினர்களாக இல்லாத பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியிடும் புத்தகங்களுக்கு தனி ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் முன்னணி அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரைகள் நடைபெறும்.
நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்கிறார். பொங்கல் பண்டிகையின் போது புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 12-ம் தேதி நடத்தி முடிக்க உள்ளோம். வாசகர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10. 10 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும். புத்தகக் கண்காட்சியில் சுமார் 10 ஆயிரம் கார்கள், 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி செய்யப்பட்டுள்ளது என்றனர். பேட்டியின்போது பொருளாளர் சுரேஷ், இணைச் செயலர்கள் லோகநாதன், சாதிக் பாட்ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.