முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சேலம் மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே உள்ளது என்ற கேள்வியை எழுப்பினார். மதுரை வந்த அமித் ஷா, தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி விட்டதாக தெரிவித்த ஸ்டாலின், தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு செய்த ஒரே ஒரு சிறப்பு திட்டத்தை சொல்வதற்கு கூட முடியாத நிலை உள்ளது என சாடினார்.

இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அவர், பின்னர் சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அங்கு ரூ.100 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. செவ்வாப்பேட்டை சந்தை மேம்பாடு, சங்ககிரி மற்றும் நரசிங்கபுரத்தில் புதிய கட்டடங்கள், ஆத்தூரில் குடிநீர் திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டன. தலைவாசல் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு 50% நிதி அளித்து வருகிறது என்றும், இது போன்ற நிலையில் தமிழகத்தை விமர்சிப்பது நியாயமல்ல என்றும் ஸ்டாலின் கண்டித்தார். படையப்பா திரைப்பட உரையை நினைவுபடுத்திய அவர், மாப்பிள்ளை அவர் தான், ஆனால் சட்டை நம்முடையது என்றபடி மத்திய அரசு மாநிலங்களின் பங்களிப்பை மறைத்து கொண்டு இருக்கிறது என விமர்சித்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிலுவையில் இருக்க, திமுக ஆட்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கீழடி அருங்காட்சியகம், ஜல்லிக்கட்டு அரங்கம் போன்றவை முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறனுக்கிடையிலான வித்தியாசம் தெளிவாக தெரிகிறது என்றார். கீழடி அறிவியல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஷெகாவத் மதிக்க மறுப்பதும், தமிழர் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கும் மனோபாவம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் அவர் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் போது, அவர் பாஜகவுடன் அமைந்த கூட்டணியை எதிர்த்து பேசாமல் டெல்லிக்கு ‘தலையாட்டி பொம்மையாக’ அமர்ந்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.