ஈரோடு: அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்றால் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் ஈரோடு புறநகர் மாவட்டத்தில் மாலை முதல் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.
பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலை பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்தது. அம்மாபேட்டை அடுத்துள்ள நத்தமேடு, மணக்காடு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் 5 நாட்டு பசுக்களை வளர்த்து வருகிறார். நேற்று மழை பெய்த பொழுது மாடுகளை கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் இடி பிடித்து மின்னல் அங்கிருந்த 3 மாடுகளை தாக்கியது. இதில் 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மற்றொரு மாடு அதிர்ஷ்டசமாக உயிர் தப்பியது. மின்னல் தாக்கிய போது மாட்டின் அருகே யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் இடத்திற்கு பூனாச்சி கிராம நிர்வாக அலுவலர் விரைந்து சென்று இருந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினார். இறந்த மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என விவசாயி முருகேசன் வேதனையுடன் கூறினார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவும் கோரிக்கை எடுத்துள்ளார். இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.