சென்னை: ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது… தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், 83 சதவீத கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.30 கோடிக்கு மேல் உள்ளது.
இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதில் வீடுகள் போன்ற சாதாரண மின் இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், தொழிற்சாலை, வணிக வளாகம் போன்ற உயரழுத்த மின் இணைப்புகளுக்கு மாதம் ஒருமுறையும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணத்தை நுகர்வோர் பிரிவு அலுவலகங்களில் நேரில் சென்று மட்டுமே செலுத்தும் முறை இருந்தது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு மின் கட்டணத்தை இணைய வழியாகவும், டிஜிட்டல் முறைகளிலும் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மின் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. சுமார் 83 சதவீத மின் கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.