சென்னை: இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாறில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தவிர, மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இன்று முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16-ம் தேதி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை சுமார் 101 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 17-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் 16-ம் தேதி வரை சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.