சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கைக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.
கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படையினர் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்தல், படகுகளை பறிமுதல் செய்து தாங்க முடியாத அபராதம் விதித்தல், சிறையில் அடைத்தல், அபராதம் கட்டத் தவறினால் சித்ரவதை என இலங்கை அரசின் தொடர் மனித உரிமை மீறல் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியது.
அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் இலங்கை அரசின் முடிவை தடுத்து நிறுத்தி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் முழுமையாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.