சென்னை: கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு செயலாளர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 42-வது வர்த்தகர்கள் தினத்தையொட்டி மதுரானில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடையும்.

இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று அறிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பின்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 5.6.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் பயனளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.