குற்றாலம்: குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கடந்த 25-ந்தேதி மாலை முதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் 5-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஆனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.