தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மேட்டூர் அணை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை ஆகியவை மேட்டூர் அணையில் சேமிக்கப்பட்டு குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் குறுவை சாகுபடி பருவம், டெல்டா பாசனப் பகுதியில் முக்கியமான சாகுபடி பருவம் மற்றும் வாழ்வாதார பருவமாகும். இந்த பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் தற்போது 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், தடையின்றி சாகுபடி பணிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன், காவிரி டெல்டா பகுதியில் உள்ள கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, அரசலாறு, திருமலைராஜன், வெண்ணாறு, வெட்டாறு, மண்ணியாறு, தூரியாறு, பொய்கையாறு, முடிகொண்டான் உள்ளிட்ட அனைத்து ஆறுகள், ஏரிகள் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.