சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசுகையில், “வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகிறது.எனவே அவர்கள் என்ன வேலைக்கு வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களை போல், வெளிமாநில தொழிலாளர்களின் வருகையை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசுகையில், ”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் அதற்கு பதில்: வெளிமாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்ய ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இணையதளங்கள் உள்ளன.

அதன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்களிலும் வெளிமாநில தொழிலாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. நகைக்கடைகள், மளிகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கடைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.