சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடிக்கும். குறிப்பாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழையும் பெய்யக்கூடும். 19-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.