சென்னை: இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். நாளை (மார்ச் 10) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 11-ம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
11-ம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கலாம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் தெளிவாக காணப்படும்.

அதிகாலை நேரங்களில் லேசான மூடுபனி காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.