நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருநெல்வேலி மாவட்டம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, கோவை, நெல்லை மாவட்டம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், அவ்வப்போது 65 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது 60 கிமீ வேகத்திலும் இருக்கும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் மற்றும் அவலாஞ்சியில் 7 செ.மீ., விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 6 செ.மீ., கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லார் மற்றும் சோலையாரில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் தேவாலா மற்றும் மேல் பவானி, தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை, கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தார், அடையாமடை, திற்பரப்பு மற்றும் குழித்துறை ஆகிய இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.