2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழ்நிலை தற்போது பரபரப்பாகி வருகிறது. இந்தியா டுடே நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, திமுக மாநிலத்தில் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் வாயிலாக இந்திய அரசியலில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், திமுகவின் வளர்ச்சி மற்றும் நீடித்த மக்கள் ஆதரவு அதனை முன்னணியில் வைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நலத்திட்டங்கள், கூட்டாட்சி பண்பாடுகள், மற்றும் மத்திய அரசின் மீதான எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுவாக வெளிப்பட்டுள்ளன.அதே நேரத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தெளிவான பிணைப்பின்றி இயங்குவதால், மக்கள் நம்பிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக, இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களில் அதிமுகவின் முந்தைய நிலைப்பாடுகள், அதன் தற்போதைய கூட்டணி நிலைக்கு முரணாக அமைந்துள்ளன.தவெக கட்சி அரசியல் களத்தில் புதிதாக வரவே, அதன் தாக்கம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.
தவெக வாக்குகளைப் பிரிப்பதால், திமுகவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்குவது கடினமாகும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.மொத்தத்தில், தற்போதைய நிலவரப்படி திமுக தனிக்கட்சியாகவும், கூட்டணியாகவும் மாநில அரசியலில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது கூடுதல் ஆர்வத்துக்குரியது.