ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரக்காடு, தேயிலை தோட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களுக்குச் சென்று அங்கு பூத்துக் குலுங்கும் வண்ணமயமான மலர்ச் செடிகளைக் கண்டு மகிழ்கின்றனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தாவரவியல் பூங்காவில் நடைபெறும் நூற்றாண்டு பழமையான மலர் கண்காட்சி உலகளவில் பிரபலமானது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விழாவுக்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தயாராகி வருகின்றன.

இதற்கிடையில், கோடை விழா நிகழ்ச்சிகள் மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்குகின்றன. மே 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், மே 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஊட்டியில் ரோஜா கண்காட்சியும் நடக்கிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 127-வது மலர் கண்காட்சி மே 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.
குன்னூரில் மே 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் பழக் கண்காட்சி நடைபெறுகிறது. இம்முறை, முதன்முறையாக, குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில், மே, 30-ம் தேதி முதல், ஜூன், 1-ம் தேதி வரை, மூன்று நாட்கள் மலை பயிர் கண்காட்சி நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மலர் கண்காட்சி நடைபெறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 5.5 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.
மேலும், அலங்கார பந்தல்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. இவை தற்போது பூக்க துவங்கியுள்ளதால், பூங்கா ஊழியர்கள் தற்போது உரமிட்டு பராமரித்து வருகின்றனர்.