சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். இதில், வரும் கோடை காலத்தில் தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த, இதுவரை 48 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
புதிதாக 20 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ள 260 திறன் கொண்ட மின்மாற்றிகளின் தரம் உயர்த்தப்பட்டு, 22 திறன் கொண்ட மின்மாற்றிகளின் தரம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் திறன் மின்மாற்றிகளை பொருத்துவது குறித்தும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட உள்ள துணை மின் நிலையங்கள் குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
மின்தடை ஏற்படும் இடங்களில் துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் தூண் பெட்டிகளை பராமரிக்கவும், நுகர்வோரின் புகார்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மின் வாரியத் தலைவர் க.நந்தகுமார், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விசு மகாஜன், மின் பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் கே.இந்திராணி, இயக்குநர் (விநியோகம்) அ.ரா. மாஸ்கர்னஸ், மின்பகிர்மானக் கழக இயக்குநர் கே.மலர்விழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், மின் வினியோகத்தில் தடை ஏற்படும் இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,536 புதிய மின்மாற்றிகளை மாற்ற திட்டமிடப்பட்டு, 5,407 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 1,129 மின்மாற்றிகள் நிறுவப்பட உள்ளன. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய மின் இணைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோடையில் உச்ச மின் தேவை 20,830 மெகாவாட்டாக இருந்தது.
இந்த ஆண்டு, உச்ச தேவை 22,000 மெகாவாட்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, விரைவில் புதிய டெண்டர் விடப்படும். ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டவுடன், மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்க, நீர்மின்சாரம் மூலம் 14,500 மெகாவாட் கண்டறியப்பட்டு, அதன் உற்பத்திக்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும். அதேபோல், பேட்டரி சேமிப்பு மூலம் 2,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, அதில் 1,000 மெகாவாட் உற்பத்தி செய்ய ஓரிரு வாரங்களில் டெண்டர் விடப்படும். சோலார் பார்க் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணியை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.