சென்னை: பொதுவாக நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. அவை நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரித்தால், மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கும்.
பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். சில பருப்புகள் கொலஸ்ட்ராலை கணிசமாக குறைக்கும். அப்படிப்பட்ட ஓர் பருப்பு தான் பாசிப்பருப்பு. உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், காப்பர், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, டயட்டரி நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல அடங்கும். இதை வாரத்திற்கு 3 முறை எடுத்து கொள்வதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
பாசிப்பருப்பை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பின் அபாயம் குறையும். ஏனெனில் எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது மாரடைப்பின் அபாயமும் அதிகரிக்கும். அதுவும் வாரத்திற்கு மூன்று முறை பாசிப்பருப்பை சாப்பிட்டால், இதயம் பாதுகாப்பாக இருக்கும்.
பாசிப்பருப்பு உடலில் கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் இருப்பை அதிகரிக்கிறது. ஆகவே இந்த பருப்பை உண்டதும் வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதோடு, இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் மெட்டபாலிச அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
பாசிப்பருப்பு உடல் திசுக்கள், தசை மற்றும் குருத்தெலும்புகளின் வளர்ச்சிக்கும், அதை சரிசெய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாசிப்பருப்பு உடலில் இன்சுலின் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆகவே இந்த பருப்பை அடிக்கடி உணவில் சேர்ப்பது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.