சென்னை: கொரோனா பாதிப்பின் போது பயணிகள் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள 296 பயணிகள் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயணிகள் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், 2020-ல் கொரோனா பரவலின் போது பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்களைக் கொண்ட பயணிகள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. சிறப்பு விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதாவது, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30. இந்த ரயில்களை வழக்கமான பயணிகள் ரயில்களாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, குறைந்த தூரம் இயக்கப்படும் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணம் கடந்த பிப்ரவரி மாதம் குறைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மெமு மற்றும் பயணிகள் ரயில்களிலும் 2-ம் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.30-லிருந்து ரூ. 10 ஆக குறைக்கப்பட்டது.
இருப்பினும், அந்த நேரத்தில் பயணிகள் ரயில்களின் எண்கள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 288 பயணிகள் ரயில்கள், நீலகிரி மலை ரயில் பாதையில் இயங்கும் 8 பயணிகள் ரயில்கள் உட்பட பூஜ்ஜியத்தில் தொடங்கும் 296 ரயில்களின் எண்கள் வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. சென்னை எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இதில் அடங்கும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில் புறப்படும் நேரம், வரும் நேரம், புறப்படும் இடம், வரும் இடங்கள், நிற்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள ரயில் எண் அவசியம். கொரோனா காலத்தில் சிறப்பு பயணிகள் ரயில் எண் வழங்கப்பட்டது. இனி, முறைப்படுத்தப்பட்டு, வழக்கமான ரயில் எண்கள் வழங்கப்படும்,” என்றனர். இந்த மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய எண்கள் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில் சேர்க்கப்படும்.