தமிழக அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தற்போது எப்போதும் தீவிரமாக எழுந்துள்ள விவாதமாக இருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், நிதி நிலையை காரணம் காட்டி, இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

எப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது.
இந்த குழு, மாநில அரசின் நிதி நிலையும், ஊழியர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, ஏதேனும் ஒரு ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்திக் கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த குழு அரசுக்கு அறிக்கை அளிக்க 9 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கடுமையான அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி செய்திருந்தும், இப்போது குழு அமைத்துப் பரிந்துரை செய்வது, கோரிக்கையை புறக்கணிப்பது என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ம் ஆண்டு தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தற்போது, இதற்கான ஆய்வு நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளதையும், அதன் அறிக்கைக்கு 9 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதையும் கண்டித்து, ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.
முத்தரசன், “இதற்கான முடிவை மறுபரிசீலனை செய்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்று, அதனை செயல்படுத்த வேண்டும்,” என தமிழக அரசை வலியுறுத்தினார்.