சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வந்துள்ள முக்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக திமுக அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். கோவை மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, தாம் நடுநிலையாக நடந்து கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

இந்த கருத்தை மறுத்த அமைச்சர் ரகுபதி, வழக்கை மூடி மறைக்கவே பழனிசாமி ஆரம்பத்தில் முயன்றதாகவும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மட்டுமே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றும் கூறினார். அதிமுகவினர் தொடர்புடையதை தெரிந்தபின், அவர்களை காப்பாற்ற பழனிசாமி நடத்திய “பித்தலாட்டங்களை” விமர்சித்தார்.
அண்ணா பல்கலைக்கழக புகார், கொடநாடு கொலை வழக்கு போன்றவற்றில் திமுக அரசின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமே பாராட்டியது என்றும், பழனிசாமியின் பதற்றம் இவற்றின் வெளிப்பாடாகவே இருக்கலாம் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததற்கு காரணம் எல்லோருக்கும் தெரியும் என்றும், பழனிசாமி பச்சைப் பொய்கள் பேசுவதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசிடம் நூறு நாள் வேலைத்திட்டம் மற்றும் மெட்ரோ திட்டத்துக்கான நிதியைப் பெற திமுக அரசு சட்டப்படி பல வழிகளில் அழுத்தம் கொடுத்தது என்றும், இதனால் தான் நிதி கிடைத்தது என்றும் ரகுபதி வலியுறுத்தினார். பழனிசாமி தனது சந்திப்பால் நிதி கிடைத்ததாக கூறுவது வெறும் “கிரிஞ்ச்” நாடகம் என்றும் அவர் கேலியுடன் விமர்சித்தார்.
இரண்டு மத்திய அரசின் சோதனைகளுக்குப் பிறகு பயந்து, தனது கட்சியை டெல்லிக்கு அடகு வைத்த பழனிசாமிக்கு மாநில உணர்வை பேசும் தகுதியே இல்லை எனவும், அவரது போலி நாடகங்கள் மக்களிடம் எந்த காலத்திலும் வெற்றி பெறாது எனவும் அமைச்சர் ரகுபதி சுட்டிக் காட்டினார்.