சென்னை: பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், டோனா பிரிட்டோவுக்கு சொந்தமான ஐஎன்டி டிஎன் 10 எம்எம் 3030 என்ற விசைப்படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் மன்னார் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
பிப்ரவரி 22-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உடனடியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்ற 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3,656. மொத்தம் 611 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி வரை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் 736 முறை தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சரே நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆனால், தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்குவதையும், கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதையும், லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதையும் மத்திய அரசு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.