சென்னை : பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதல் இடத்திலும், 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது.