கிளாம்பாக்கம்: சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் பேருந்துகள் செல்லாததால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பயணிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இரவில் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்குப் பிறகு, திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் ஓடவில்லை.

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில், பொறுமை இழந்த பயணிகள், அதிகாலை 1 மணியளவில் புறப்பட்ட சில பேருந்துகளை சிறைபிடித்து, திடீரென சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் கலந்து கொண்டதால், நெடுஞ்சாலையில் 3 கி.மீ. போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலை மறியல் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கி.மீ.க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என்று கோரி பயணிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கிளாம்பாக்கம் பகுதியில் பல மணி நேரத்திற்கும் மேலாக பதட்டமான சூழ்நிலை நிலவியது. 2 மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை சீரானது. சிங்கப்பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால், இரவில் பெருமாள் சாலையில் நடந்து செல்லும் போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், பேருந்து நிலையத்திற்குள் நுழைய வேண்டிய பேருந்துகள் தாமதமாகி, நள்ளிரவு என்பதால் உடனடியாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.