பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழகத்தில் 8.23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி துவங்குகிறது. பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8.23 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 7,557 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 18,369 மாணவர்களும், 4,755 தனியார் தேர்வர்களும், 137 கைதிகளும் அடங்குவர். பொதுத் தேர்வுக்கு 44,236 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதன்மை மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஹால் டிக்கெட் விதிகளை பின்பற்ற வேண்டும். பொதுத் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுத அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தர தடை விதிக்கப்படும்.
மேலும், பள்ளி நிர்வாகம் முறைகேடான செயல்களை ஊக்குவிக்க முயன்றால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதுதவிர, பொதுத்தேர்வு தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075 மற்றும் 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பள்ளிக் கல்வித்துறையின் ‘14417’ என்ற இலவச உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.