ஊட்டி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், ஓம் பகதூர் என்ற காவலர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன.
இது தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சுவாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சுவாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.செந்தில்குமார் முன் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் இல்லாத நிலையில், அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி போலீசார் மட்டுமே ஆஜராகினர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.