டெல்லி: ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, 3-ம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீண்ட தூர ரயில்களிலும் தூங்கும் வசதியுடன் கூடிய சாதாரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், 3-ம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மொத்தம் ரயில் கட்டணம் மூலம் ரூ. 80,000 கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூலம் மட்டும் ரூ. 30,000 கோடி வருவாய் கிடைக்கிறது. 2019-20 நிதியாண்டில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூலம் ரூ.12,370 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தற்போது 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூலம் ரூ.30,089 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.37,000 கோடியாக உயர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
வருவாயை அதிகரிக்க ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகளால், குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக குறைந்த கட்டணம் வசூலிக்கும் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஏசி பெட்டிகளில் மட்டுமே பயணிக்க வேண்டிய கட்டாயம் பயணிகள் ஏற்படுத்தப்படும். இதனால், நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ரயில் பயணம் என்பது கடினமான பணியாக மாறி வருகிறது.