சென்னை: “மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும். இது மிகவும் தவறான முடிவு.
மத்திய அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் நகர்ப்புற பணக்காரக் குடும்பங்களின் பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். 5 அல்லது 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் படிப்பை நிறுத்திவிடுவார்கள். 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தத்துவம் அதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க உருவாக்கப்பட்டது.

2020-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாமகவுடன் பேச்சு வார்த்தை நடத்திய அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என அறிவித்தார்.
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு முழு கல்வி சுதந்திரம் கிடைக்கும் வரை, 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி வழங்கும் முறை தொடர வேண்டும்,” என வலியுறுத்தினார்.