இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, பிப்ரவரி 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ராமேஸ்வரம் மோட்டார் படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே மோட்டார் படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் மீனவர் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வரும் 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி பிப்ரவரி 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.