சென்னை: தமிழக பட்ஜெட் அறிவிப்பின்படி, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, மண்டல விரைவு ரயில் போக்குவரத்து (ஆர்.ஆர்.டி.எஸ்.,) எனப்படும் அதிவேக வழித்தடங்களை உருவாக்க, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், விரிவான நகரமயமாக்கலை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர், கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டரை வெளியிட்டுள்ளது. சென்னை செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்துக்கு 160 கி.மீ வேகத்தில் 167 கி.மீ தூரத்துக்கு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை-காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கி.மீ.யில் 140 கி.மீ தூரமும், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்துக்கு 185 கி.மீ தூரமும் இயக்கப்படும்.
அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும் ஆர்ஆர்டிஎஸ் போக்குவரத்து டெல்லி மற்றும் மீரட் இடையே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.