தஞ்சாவூர்: 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்க தலைவர் வசந்தா தலைமை வகித்து பேசினார். செயலாளர் சரிதா முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜி, இணைச் செயலாளர் ராதிகா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தின் போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தங்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் செய்ய வேண்டும். தங்களுக்கான சம்பளத்தை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து நேரடியாக விடுவிக்க வேண்டும், அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்கக்கூடாது, மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேரு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்க காத்திருப்பு போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்து மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சுகாதார போக்குவரத்து துறை ஓய்வுபெற்றோர் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் குமார வேலு ஆகியோர் பேசினர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த போராட்டத்தில் 150க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.