சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6 வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக மாநில ஸ்லாஸ் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் படிக்கும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6 வரை நடத்தப்படும். இந்தத் தேர்வு ஒரு வினாத்தாளின் அடிப்படையில் நடத்தப்படும்.

வினாத்தாளில் 3-ம் வகுப்பிற்கு 35 கேள்விகளும், 5-ம் வகுப்பிற்கு 45 கேள்விகளும், 8-ம் வகுப்பிற்கு 50 கேள்விகளும் இருக்கும். இதற்கான அனைத்து மாதிரி வினாத்தாள்களும் மாநில மதிப்பீட்டு போர்டல் மூலம் பள்ளிக் கல்வி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தலைமை ஆசிரியர்கள் இதை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகளை நடத்த வேண்டும்.
மாதிரித் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் ஜனவரி 13, 20, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் ஏதேனும் சிக்கல்களைத் தீர்க்க ஆசிரியர்கள் 14417 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.